வரலாறு
இந்தியாவில் பொருட்களுக்கான மறைமுகவரியாக நடுவண் அரசு கலால் வரி மற்றும்
நடுவண் விற்பனை வரியையும் சேவைகளுக்கு சேவை வரியையும் வசூலித்து வருகிறது.
மாநி அரசுகள் விற்பனை வரியையும் சேவைகளுக்கு கேளிக்கை வரி, உல்லாச வரி
எனவும் வசூலித்து வருகின்றன. இவை விதிக்கப்படும் பொருட்களும் சேவைகளும்
அவற்றிற்கான வரிவிகிதமும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது. அண்மையில்
பெரும்பாலான மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரிக்கு மாறியபோதும் வணிகர்கள்
இத்தகைய குறைபாடுகளை வெளிப்படுத்தி வந்தனர். மொருளியல் வல்லுனர்களின்
பரிந்துரையின் அடிப்படையில் 2007-2008ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது
அப்போதைய நடுவண் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இத்தகைய வரி ஏப்ரல் 2010 முதல் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதற்கான செயலாக்கத் திட்டத்தினை வரையறுக்க மே 10, 2007 அன்று
கூட்டப்பட்ட மாநில நிதி அமைச்சர்களின் குழு, நடுவண் நிதி அமைச்சரின்
ஆலோசகர், மநில நிதி அமைச்சர்கள் குழுவின் செயலாளர் மற்றும் நடுவண் நிதி
அமைச்சகத்தின் வருவாய்த்துறை கூட்டுச்செயலர் மற்றும் மாநில நிதி
அமைச்சகங்களின் செயலர்கள் அடங்கிய கூட்டு செயற்குழு வை ஏற்படுத்த
பரிந்துரைத்தது. இந்தக் கூட்டு செயற்குழு தனது ஆய்வுகளுக்குப் பின்னரும்
பிற வல்லுனர்கள் மற்றும் வணிக சங்கங்களுடான கலந்தாய்வுகளுக்குப் பின்னரும்
தனது அறிக்கையை நவம்பர் 19, 2007 அன்று அமைச்சர் குழாமிற்கு அளித்தது.
இந்த அறிக்கையை நிதி அமைச்சர்கள் குழாம் நவம்பர் 28, 2007இல் கூடி
விவாதித்தது. இந்த கலந்தாய்வு மற்றும் சில மாநிலங்களின் எழுத்து ஊடான
கருத்துக்களின் அடிப்படையில் கூட்டு நிதி அமைச்சர்களின் குழு தனது
அறிக்கையில் ஏப்ரல் 30, 2008இல் நடுவண் அரசுக்கு சில மாற்றங்களை
பரிந்துரைத்து அனுப்பியது. நடுவண் அரசின் கருத்துக்கள் திசம்பர் 12,
2008இல் பெறப்பட்டு கூட்டு நிதி அமைச்சர்கள் குழாம் இதனை திசம்பர் 16,
2008இல் பரிசீலித்தது. மாநிலங்களின் முதன்மைச் செயலர்கள் இக்கருத்துகளை
மேலும் ஆய்வு செய்வர் என தீர்மானிக்கப்பட்டது. இந்த கருத்துரைகளின்படி
சனவரி 21,2009இல் அனைவராலும் உடன்படக்கூடிய வரைவொன்றை கொள்கையளவில்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்புடைய மாநில அரசு அதிகாரிகளும் நடுவண் அரசு
அதிகாரிகளும் கலந்தாய்ந்து இதனை நிர்வகிக்கும் அமைப்பு குறித்த
பரிந்துரைகளை வழங்கினர்.
அக்டோபர் 19, 2009 அன்று நிதி அமைச்சர் பிரணப் முகர்ஜி கூட்டு மாநில
நிதியமைச்சர்கள் குழாத்துடன் உரையாடினார். இதனைத் தொடர்ந்து
மாநிலங்களுக்கான இழப்பீடு, வரி நிர்வாக கட்டமைப்பு போன்றவை குறித்த விவரமாக
உரையாடப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய முதல் விவாதத் தாளை, இந்த வரி
குறித்து எழும் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை
அனுபந்தத்துடன், பொதுமக்கள் மற்றும் தொழில் மற்றும் வணிக அமைப்புகளின்
கருத்துக்களுக்காக வெளியிட்டார்.